Sunday, October 30, 2011

மாயை





இருப்பனவற்றுள்
புதைந்தபடியேதான்
இல்லாதவற்றின் இருப்பை
மீட்டெடுக்கிறது அலைகிற மனம்...

எந்தக் கத்தியின்
செய் நேர்த்தியும்
முழுமையைச் சிதைப்பதற்காகவே
என்ற உணராமையைத்தான்
மறைந்தொழுகுகிறது அலைகிற மனம்...

எல்லாவற்றின் துல்லிய அசைவுகளையும்
அணுஅணுவாய் இயக்கும் உயிரின்
உன்னதங்களுக்கு முன்னால்தான்
அறியாமையின் அத்தனையையும்
கட்டவிழ்க்கிறது அலைகிற மனம்...

மாயையின் தோலுரிக்கும்
உண்மையின் பின்னேதான்
ஒவ்வொரு வாழ்க்கையின்
இறுதி முடிச்சையும்
காட்சிப்படுத்தியிருக்கிறது கடவுள்
என்பதான ஒன்று...

ஆனாலும்
இறுதியில்தான் இறுதி முடிச்சை
அவிழ்க்க வைக்கிறது
வாழ்வதான தோற்றமுரைக்கும்
மாயை.....

No comments:

Post a Comment