Sunday, October 30, 2011

மாயை





இருப்பனவற்றுள்
புதைந்தபடியேதான்
இல்லாதவற்றின் இருப்பை
மீட்டெடுக்கிறது அலைகிற மனம்...

எந்தக் கத்தியின்
செய் நேர்த்தியும்
முழுமையைச் சிதைப்பதற்காகவே
என்ற உணராமையைத்தான்
மறைந்தொழுகுகிறது அலைகிற மனம்...

எல்லாவற்றின் துல்லிய அசைவுகளையும்
அணுஅணுவாய் இயக்கும் உயிரின்
உன்னதங்களுக்கு முன்னால்தான்
அறியாமையின் அத்தனையையும்
கட்டவிழ்க்கிறது அலைகிற மனம்...

மாயையின் தோலுரிக்கும்
உண்மையின் பின்னேதான்
ஒவ்வொரு வாழ்க்கையின்
இறுதி முடிச்சையும்
காட்சிப்படுத்தியிருக்கிறது கடவுள்
என்பதான ஒன்று...

ஆனாலும்
இறுதியில்தான் இறுதி முடிச்சை
அவிழ்க்க வைக்கிறது
வாழ்வதான தோற்றமுரைக்கும்
மாயை.....

Saturday, March 5, 2011

ஜென் இலைகள் 3





ஒரு வலியை இன்னொரு
வலிதான் இடம்பெயர்க்கிறது...

ஒரு வாழ்வை இன்னொரு
வாழ்வுதான் அர்த்தப்படுத்துகிறது...

ஒரு கோபத்தை இன்னொரு
கோபம்தான் சந்துவிக்கிறது...

ஒரு ஆறுதலை இன்னொரு
ஆறுதல்தான் உணரவைக்கிறது...

ஒரு அவமானத்தை இன்னொரு
அவமானம்தான் அடையாளப்படுத்துகிறது...

ஒரு அசிங்கத்தை இன்னொரு
அசிங்கம்தான் மூடிவைக்கிறது...

ஒரு ஆளுமையை இன்னொரு
ஆளுமைதான் நிலைப்படுத்துகிறது...

ஒரு நம்பிக்கையை இன்னொரு
நம்பிக்கைதான் நிறைவு செய்கிறது..

ஒரு வழியை இன்னொரு
வழிதான் உருவாக்கித்தருகிறது...


இவை எல்லாவற்றையும்
கடவுள்தான்
பிரிப்பதும் கோர்ப்பதுமான
நிகழ்வுகளாக்கி வைக்கிறார்
எதுவும் தெரியாதததுபோல.....

Monday, February 28, 2011

அது




பாதி மண்ணில் புதைந்தும்
புதைந்துவிடுவேன் மொத்தமும்
எனத் தெரியும் பாதியுமாய்
கிடந்தது அது...

அதுவும் பேசவில்லை
அதைப்பற்றி ஏந்திய மண்ணும்
உரைக்கவில்லையேதும்...

எதுவுமிருக்கலாம் அதன் மனதில்
யாரறிவார் படைத்தவனன்றி..

விருப்பமற்றவைகளுக்காக கொஞ்சம்
வெறுப்புக்களாய் கொஞ்சம்
கொன்றது கொஞ்சம் உயிரைத் தின்றது
கொஞ்சம்..
இரக்கமின்றித்தான் எல்லாவற்றையும்
உருவிய வதம் நிகழ்ந்தது...
ஒரு புள்ளியென அன்பு..
உதறலில் ஒரு ஆறுதல்..
சும்மா உரசலில் கொஞ்சம் சுகம்..
மற்றவையெல்லாம் சொல்வதற்கில்லை
யூகிக்கிறேனென்னால் அதற்குப் பொறுப்புமில்லை..


எழுதியதால்தான் இந்த நிலையென்கிறது
ஒரு கூட்டம்...
எழுதாமல் இருப்பதால்தான் இந்த கதியென்கிறது
ஒரு கூட்டம்...
என்னவெல்லா எழுதியதோ யார் கண்டா?
எத்தனை மரியாதை இருந்திருக்கும்
எத்தனை அவமானம் இப்போது

மனசில் கசிகிறது
அதன் கலைக்கப்படாத வாழ்வின்
தொடக்கம்...

எல்லோருக்கும்தான்..

Monday, January 17, 2011

பயணம்




நீண்டுகிடந்த உடலையெழுப்பி
நீர்விட்டு அலம்பி சுத்தம் செய்து
உடைமாற்றி ஒப்பனையிட்டுப்
புறப்பட்டுவிட நெடுநாள் வாய்க்காத
பயணமொன்று வாய்த்தது...

உடன் மனம் துள்ளி
பட்டியலிட்டது என்னென்ன
உடன் கொண்டுபோக நலம் பயக்குமென்று...

சிதறாமல் செலவு செய்திட
கொஞ்சம் சிரிப்பு...
நாலைந்து கொட்டாவிகள்
இருக்கட்டுமேயென்று இலைகாம்பளவு
இயலாமை
பயணத்தை நினைத்துப்பார்க்க..
கைப்பிடியளவு கோபம்
பயணத்தை அலுப்பூட்டாது...
கொஞ்சம் தாராளமாய்
சிறிய தலையணை அளவு உறக்கம்..
எதற்கும் செருகிக்கொள்ளுங்கள்
என்றவள் சொல்ல ரோஷத்தில் கொஞ்சம்..
கேரி பேக்களவில் பொறாமை..ஆதங்கம்..
ஏக்கம்..எதிர்பார்ப்பு..இவை பொட்டலங்களில்..

உடம்பும் மனசும் கணத்துபோனது
இவற்றின் பாரத்தால் இருப்பினும்
பாதுகாப்பான பயணத்திற்கு
இவையாவும் அவசியமானவை...

ஏதோ விடுபட்டது என்று
யோசிக்கையில் சட்டென்று
நினைவில் உறுத்தியது
குழப்பம் விடுபட்டுவிட்டதென்று..
அதற்கும் இடமிருந்தது...

இப்போது பயணத்தில்.
நெடிய முடிவுறா பயணமது.
அவரவர் கொண்டுவந்ததைப்
பரிமாறும் சந்தர்ப்பங்களில்
பயணத்தின் பயன்கள் எல்லாம்
பரிதவித்துக் கரைந்துபோயின..

பயணம் முடிவுறும்போது
உயர்ந்த வானிலிருந்து கோழிக்குஞ்சுக்காய்
கீழிறங்கி ஏமாந்துபோகும்
பருந்தின் வீழ்ச்சியாய்..

வெறுமை நிறைகிறது
பயணத்தின் முடிவுறுதலுக்கு முன்
எதனாலும் ஈடுசெய்யமுடியாததாய்...

Sunday, January 2, 2011

தெளிதல்



விளைந்தது யாவும்
விலைக்குள் அடங்காது,..

களைந்தது யாவும்
களங்கத்தில் அடங்காது...

வெந்தது யாவும்
பசியாற்றலில் அடங்காது...

மீந்தது யாவும்
கழித்தலில் அடங்காது...

தெளிந்தது யாவும்
வீடுபேற்றில் அடங்காது...

தேர்ந்தது யாவும்
திறத்தில் அடங்காது....

யாவும் யாவும் எண்ணில்
யாவற்றிலும் அடங்காது...

வெந்தது பதமாகும்
நொந்தது நுர்லாகும்
பதமும் நுர்லும்
ஞானமாகும்..தெளிதலில்
ஞானமுமொரு
படிக்கல்லாகும்...

படியாய் கிடந்து
தெளிவோம்...