Friday, December 31, 2010

வ(ழி)லியறிதல்





பனிவிட்ட பொழுதின்பின்னும்
மழையடங்கி ஒளிந்தபின்னும்
ஈரம்தேக்கிய செங்கற்களினிடையே
கிடந்தது அந்த தேள்...

கிடைத்த நாட்களுக்குள் கலவிசெய்து
பேறும் முடிந்து நாலைந்து குஞ்சுகளுடன்
காத்துக்கிடந்தது..

இடமடைக்கிறதென செங்கற்களை
அப்புறப்படுத்துகையில் பொறுமைகாத்து
எடுக்கஎடுக்க அவசரஅவசரமாய்
கீழிறங்கிப்போனது காப்பாற்றிக்கொள்ள...

தரையொட்டிக்கிடந்த அந்த கடைசிக்கல்லில்
இருந்து ஏறியது விரலில்
சடக்கென்று ஒரு கொட்டு...

வலியேறியது நெஞ்சடைக்க
கண்ணிருட்ட கடுகடுவென்று கசக்கிப்பிழியும்
வேதனையுடன்...

நண்பர்களாய் இருந்த நாலைந்து கரப்புகள்
ஒன்றிரண்டு பூரான்கள்..பொட்டுப்பூச்சிகள்
சிலந்திகள் சில..கொஞ்சம் பிள்ளையார் எறும்புகள்..
அடர்கருப்புநிறமேந்திய சில பல்லிகள்
இவர்களை விரட்டிய குற்றத்திற்காகவும்...
கடைசியாக தன் குடும்பத்தோடு
மிஞ்சாத வாழ்வில் ஏற்கும் மரணத்திற்காகவும்
காலத்தில் நீ செய்யாத பணிக்காக
எங்களுக்கு மரணமா என்பதையுணர்த்தவுமாக
அந்த கொட்டும் விஷமும் வலியும்...

வலிபொறுக்காது அடைந்த சினத்தின்
வலியாகக் குஞ்சுகளோடு இறந்துகிடந்தது
நமதான அந்தத் தேள்
வலியுறுத்தி...

Tuesday, December 7, 2010

துறவு



அப்போது கிடைத்துவிடும்...

மலச்சிக்கலின் அனுபவிப்பைப் போல
கண்கள் சிவப்பேறி வலிக்கவும்
மூக்கினுள் நீரேறிக்கொள்ளவும்
வேண்டாமல் வாய்நிறைய நீர்குடித்தும்
நீச்சல்
கற்றுக்கொண்டபின் கண்ணில்படும்
வெள்ளப்பெருக்காற்றைப்
பார்க்கையில் வரும் அலட்சியத்தில்...

பிடித்தது பிடிபடாமலும்
பிடிபட்டதில் தப்பிக்கமுடியாமலும்
விரும்பியதை சுவைக்கவியலாமலும்
விருப்பமற்றதை விடமுடியாமலும்
மனம் திறக்கா கதவுகளின் முன்னாலும்
காயப்படுத்தும் காத்திருப்புக்களிலும்
உடலை நகர்த்தி உயிரை அசைக்கும்
பொழுதுகளின் வெப்பத்திலும்...


நெடுநேரம் அடக்கிவைத்த சிறுநீர்
நெடுநேரம் அடக்கிவைத்த தாகம்
இரண்டும் விடுபட்ட சொல்லிலெழுதா
சுகமென அனுபவித்த காமத்தின்
கழித்த பின்னரும்....


எங்கும் திருப்தியுறாவண்ணம்
எதிலும் நிறைவுறாவண்ணம்
இடர்களிலும் தடைகளிலும்
சிக்கல்களிலும் வீசியெறியப்பட்ட
வாழ்வைச் சகித்துக்கொண்டு
நம்பிக்கையின் ஊசிமுனைகளில்
வாழ்ந்திருக்கிறேன் என்று
ஓங்கிச் சொல்லும் திருப்தியின் பின்னரும்...


அப்போது கிடைத்துவிடும்
துறவு நன்மைகளோடு
விடைபெறுவதற்கும்....