Monday, November 29, 2010

இருப்பு


தொப்புள்கொடி விடுபட்ட
குழந்தையாய் நிற்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் தரிப்பிலும்...

தேர்ந்தவனின் வல்லமைமிகு
வாசிப்பின் இசைபோல
ஒத்துழைக்கிறது வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் கிளைப்பிலும்...

வாழ்க்கை விலக்கியவற்றை
வாழ்க்கையெனப் போதையுறும்போது
வாழ்க்கை விலகுகிறது...

தன்முனைப்பிலும் தன்னாணவத்திலும்
தாய் வயிறு பற்றி குட்டிக்குரங்கைப்போல
தளர்வுறா பிடிவாதத்துடனும்
இயங்கிய வாழ்க்கையின்
மாயை விலகும்போது
முடிந்துவிடுகிறது வாழ்ந்ததான
வாழ்வு...

நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒரு
விபத்தினைப் பார்க்கும்
பரிதாப உணர்வுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறது
நம்மை
நமதான விலகிவிட்ட
வாழ்க்கை...

Friday, November 26, 2010

வாய்த்தல்




ஒவ்வொரு நாளும்
சாலைகளில்
கண்களறியாத உயிர்கள்
தொடங்கி
கன்றுக்குட்டிகள்
நாய்க்குட்டிகள்
ஆட்டுக்குட்டிகள்
கோழிக்குஞ்சுகள்
பூனைக்குட்டிகள்
இவற்றோடு
மனிதக் குட்டிகளும்

கண்ணுக்குத் தெரியாமல்
வரையப்பட்டிருக்கும்
மரணக் கத்தியில்
வெட்டுப்பட்டு
உயிரற்றதுவாய்...

மனசு கேட்கிறது
திடீரென்று வரும் மரணத்தில்
அவை என்ன நினைக்கும்?

எல்லாம் மறந்த நாளில்
முகமறியா குரல்வழி
விடை கசிகிறது..

பொசுக்குன்னு உயிர்போற
புண்ணியம் எல்லாருக்கும்
கிடைக்குமா?,........

கிடைக்குமா இதுதான்
சரியான விடையென்பதற்காதாரம்..?

Wednesday, November 24, 2010

யாருமில்லை எதுவுமில்லை...




பங்கிட்டுக்கொள்ள
யாருமில்லை...

தங்களுக்காகக்கூட என்றில்லாமல்
முன்பின் யோசிக்காமலும்
ஒருசிறிதும் வெட்கமில்லாமலும்
பாரபட்சமில்லாமலும்
கோடானுக்கோடி சொற்களை
மூச்சிரைக்க..உடல் நொந்துபோக
வாரியிறைத்து காத்திருந்தார்கள்..
ஏக்கம் கொண்டார்கள்..
எதிர்பார்ப்புடன் கண்ணிமைக்காதிருந்தனர்
எப்படியும் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனும்
கண்களை அகலத் திறந்திருந்தார்கள்

வாழ்வின் இறுதியிலிருப்பதை
முகக்குறிப்பிலிருந்து
புரிந்துகொண்டார்கள்..

அழுகும் சதையும்..நாறும் குருதியும்
புழுக்களாய் புதுபுதுவென்று கிளம்பும்
அடங்கிய காற்று அடங்கிவிடாது
எழும்பிவிட்டாலென்று அறிந்தும் அறியாதிருந்தார்கள்..
அவர்களுக்குத் தேவை அடங்கியபின்
அழுகும் சதையும் குருதியும்
எலும்புகளுமல்ல..ஆனால் இவற்றின்
ஒத்துழைப்பால் கிடைத்த உயிரற்ற
அசையா அத்தனையும்...

கண்ணுக்குத் தெரியா காற்றுவெளியினை
உறவுகளெனும் ஒற்றைச் சொல்லால்
ஓயாது எச்சில்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

முன்பு சொல்லியிருந்த
இளமை நிலையாமை உயிர் நிலையாமை
யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை
எல்லாம் மறந்துவிட்டநிலையில்
அப்படி அறிந்திராத சொற்பிரதேசத்திலிருந்து
வந்தவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள்..

கண்களின் வழியான கடைசி பார்வை முழுக்க
அமைதியின் வடிவாய் அது காத்திருக்கிறது
அழகிய கைகளுடன்..
ஒவ்வொரு இனிய பொழுதில்
இவர்களையும் ஒவ்வொருவராய்..

எனவே
வாழும்வரை வாழ்வோம்
வாழ்க்கையை வாழ்க்கையாய்....

Monday, November 1, 2010

வாழாத தருணங்கள்


எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு எல்லோரும் கலந்து
கொள்ள அழைப்பும்விடப்பட்டு
நமது உயர்ந்த இருக்கையின் கால்களை ஏந்திப்
பிடித்திருக்கிறவர்களின் முன்பாக
பறவைகள் இரைதேடுவதற்காக மிகுந்த மகிழ்ச்சியோடு
இறக்கைகளைச் சிக்கெடுத்து உதறி விரித்து
வானெழும்பும் அற்புதத் தருணங்களில் அது எப்போதும்
நமக்குப் பிடித்தமானது என்பதை அனுபவிக்கமுடியாத
தருணத்திலும் இதமான வெயிலின் கம்பளம் விரிகின்ற
வெப்பத்தை உணரும் பொழுதிலும்
எங்கோ இசைக்கப்பட்டு வழிகின்ற ஒரு அற்புதமான
இசையின் கிறங்கித் தவிக்கின்ற தருணத்திலும்
நம்மீது நிகழ்த்தப்படுகின்ற
ஒரு திருடனின் மீது..அல்லது ஒரு தெருநாயின் மீது..
ஒரு பிடிக்காத ஒருவனின்மீது எறிகின்ற கற்குவியல்களைப்
போல நமக்கு அவமானங்கள் பூசப்படுகின்றபோது
அதையுணராமல்..அதைத் தடுக்காமலும்..அதுபோன்ற
தருணங்கள் நமக்குப் பிடிக்காத யாருக்கேனும்
நிகழ்ந்துவிடவேண்டும் என்றெண்ணி மருகுகிற பொழுதில்
நாம் வாழாதிருக்கிறோம் இந்த
வாழ்வின் அற்புத தருணத்தை.....


மிக உயர்ந்த
உச்சத்திலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
இலைகள்...

அதற்குமேலான
பரந்து விரிந்த ஆகாயவெளியிலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
சிறகுகள்...

உயர்ந்ததின் உச்சம்
பணிதலென்பது பழைய ஞானம்
என்றாலும்
அது ஞானம்தான்..

தரைவிட்டெழும்பா
உறுதிசெய்யப்பட்டுவிட்ட மாயவாழ்வின்
சகலவிதிகளிலும் சிக்குண்டு
உதிர்ந்துவிடுகின்ற
மனித வாழ்வின் அத்தனை பிரயத்தனங்களும்தான்
எல்லாவித இரைச்சல்களுடனும்
எல்லா உயிர்களுக்குமான
இடையூறுகளுடனும்
இறங்குகின்றன எப்போதும்
உச்சமில்லை என்றுறுத்தி...

பின்குறிப்பாகவே...

ஒரு மனித உயிர் சாம்பலான
தருணத்தின் பொழுதுகளில்
எல்லா பறவைகளின் இசைக்கூறுகளும்
ஒரேயலைவரிசையில்
அசைந்தோடுகின்றன
கோடைமுடிந்து வருகின்ற
நிறைநதியாய்....