Friday, December 31, 2010

வ(ழி)லியறிதல்





பனிவிட்ட பொழுதின்பின்னும்
மழையடங்கி ஒளிந்தபின்னும்
ஈரம்தேக்கிய செங்கற்களினிடையே
கிடந்தது அந்த தேள்...

கிடைத்த நாட்களுக்குள் கலவிசெய்து
பேறும் முடிந்து நாலைந்து குஞ்சுகளுடன்
காத்துக்கிடந்தது..

இடமடைக்கிறதென செங்கற்களை
அப்புறப்படுத்துகையில் பொறுமைகாத்து
எடுக்கஎடுக்க அவசரஅவசரமாய்
கீழிறங்கிப்போனது காப்பாற்றிக்கொள்ள...

தரையொட்டிக்கிடந்த அந்த கடைசிக்கல்லில்
இருந்து ஏறியது விரலில்
சடக்கென்று ஒரு கொட்டு...

வலியேறியது நெஞ்சடைக்க
கண்ணிருட்ட கடுகடுவென்று கசக்கிப்பிழியும்
வேதனையுடன்...

நண்பர்களாய் இருந்த நாலைந்து கரப்புகள்
ஒன்றிரண்டு பூரான்கள்..பொட்டுப்பூச்சிகள்
சிலந்திகள் சில..கொஞ்சம் பிள்ளையார் எறும்புகள்..
அடர்கருப்புநிறமேந்திய சில பல்லிகள்
இவர்களை விரட்டிய குற்றத்திற்காகவும்...
கடைசியாக தன் குடும்பத்தோடு
மிஞ்சாத வாழ்வில் ஏற்கும் மரணத்திற்காகவும்
காலத்தில் நீ செய்யாத பணிக்காக
எங்களுக்கு மரணமா என்பதையுணர்த்தவுமாக
அந்த கொட்டும் விஷமும் வலியும்...

வலிபொறுக்காது அடைந்த சினத்தின்
வலியாகக் குஞ்சுகளோடு இறந்துகிடந்தது
நமதான அந்தத் தேள்
வலியுறுத்தி...

Tuesday, December 7, 2010

துறவு



அப்போது கிடைத்துவிடும்...

மலச்சிக்கலின் அனுபவிப்பைப் போல
கண்கள் சிவப்பேறி வலிக்கவும்
மூக்கினுள் நீரேறிக்கொள்ளவும்
வேண்டாமல் வாய்நிறைய நீர்குடித்தும்
நீச்சல்
கற்றுக்கொண்டபின் கண்ணில்படும்
வெள்ளப்பெருக்காற்றைப்
பார்க்கையில் வரும் அலட்சியத்தில்...

பிடித்தது பிடிபடாமலும்
பிடிபட்டதில் தப்பிக்கமுடியாமலும்
விரும்பியதை சுவைக்கவியலாமலும்
விருப்பமற்றதை விடமுடியாமலும்
மனம் திறக்கா கதவுகளின் முன்னாலும்
காயப்படுத்தும் காத்திருப்புக்களிலும்
உடலை நகர்த்தி உயிரை அசைக்கும்
பொழுதுகளின் வெப்பத்திலும்...


நெடுநேரம் அடக்கிவைத்த சிறுநீர்
நெடுநேரம் அடக்கிவைத்த தாகம்
இரண்டும் விடுபட்ட சொல்லிலெழுதா
சுகமென அனுபவித்த காமத்தின்
கழித்த பின்னரும்....


எங்கும் திருப்தியுறாவண்ணம்
எதிலும் நிறைவுறாவண்ணம்
இடர்களிலும் தடைகளிலும்
சிக்கல்களிலும் வீசியெறியப்பட்ட
வாழ்வைச் சகித்துக்கொண்டு
நம்பிக்கையின் ஊசிமுனைகளில்
வாழ்ந்திருக்கிறேன் என்று
ஓங்கிச் சொல்லும் திருப்தியின் பின்னரும்...


அப்போது கிடைத்துவிடும்
துறவு நன்மைகளோடு
விடைபெறுவதற்கும்....

Monday, November 29, 2010

இருப்பு


தொப்புள்கொடி விடுபட்ட
குழந்தையாய் நிற்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் தரிப்பிலும்...

தேர்ந்தவனின் வல்லமைமிகு
வாசிப்பின் இசைபோல
ஒத்துழைக்கிறது வாழ்க்கை
ஒவ்வொரு உயிர் கிளைப்பிலும்...

வாழ்க்கை விலக்கியவற்றை
வாழ்க்கையெனப் போதையுறும்போது
வாழ்க்கை விலகுகிறது...

தன்முனைப்பிலும் தன்னாணவத்திலும்
தாய் வயிறு பற்றி குட்டிக்குரங்கைப்போல
தளர்வுறா பிடிவாதத்துடனும்
இயங்கிய வாழ்க்கையின்
மாயை விலகும்போது
முடிந்துவிடுகிறது வாழ்ந்ததான
வாழ்வு...

நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒரு
விபத்தினைப் பார்க்கும்
பரிதாப உணர்வுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறது
நம்மை
நமதான விலகிவிட்ட
வாழ்க்கை...

Friday, November 26, 2010

வாய்த்தல்




ஒவ்வொரு நாளும்
சாலைகளில்
கண்களறியாத உயிர்கள்
தொடங்கி
கன்றுக்குட்டிகள்
நாய்க்குட்டிகள்
ஆட்டுக்குட்டிகள்
கோழிக்குஞ்சுகள்
பூனைக்குட்டிகள்
இவற்றோடு
மனிதக் குட்டிகளும்

கண்ணுக்குத் தெரியாமல்
வரையப்பட்டிருக்கும்
மரணக் கத்தியில்
வெட்டுப்பட்டு
உயிரற்றதுவாய்...

மனசு கேட்கிறது
திடீரென்று வரும் மரணத்தில்
அவை என்ன நினைக்கும்?

எல்லாம் மறந்த நாளில்
முகமறியா குரல்வழி
விடை கசிகிறது..

பொசுக்குன்னு உயிர்போற
புண்ணியம் எல்லாருக்கும்
கிடைக்குமா?,........

கிடைக்குமா இதுதான்
சரியான விடையென்பதற்காதாரம்..?

Wednesday, November 24, 2010

யாருமில்லை எதுவுமில்லை...




பங்கிட்டுக்கொள்ள
யாருமில்லை...

தங்களுக்காகக்கூட என்றில்லாமல்
முன்பின் யோசிக்காமலும்
ஒருசிறிதும் வெட்கமில்லாமலும்
பாரபட்சமில்லாமலும்
கோடானுக்கோடி சொற்களை
மூச்சிரைக்க..உடல் நொந்துபோக
வாரியிறைத்து காத்திருந்தார்கள்..
ஏக்கம் கொண்டார்கள்..
எதிர்பார்ப்புடன் கண்ணிமைக்காதிருந்தனர்
எப்படியும் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனும்
கண்களை அகலத் திறந்திருந்தார்கள்

வாழ்வின் இறுதியிலிருப்பதை
முகக்குறிப்பிலிருந்து
புரிந்துகொண்டார்கள்..

அழுகும் சதையும்..நாறும் குருதியும்
புழுக்களாய் புதுபுதுவென்று கிளம்பும்
அடங்கிய காற்று அடங்கிவிடாது
எழும்பிவிட்டாலென்று அறிந்தும் அறியாதிருந்தார்கள்..
அவர்களுக்குத் தேவை அடங்கியபின்
அழுகும் சதையும் குருதியும்
எலும்புகளுமல்ல..ஆனால் இவற்றின்
ஒத்துழைப்பால் கிடைத்த உயிரற்ற
அசையா அத்தனையும்...

கண்ணுக்குத் தெரியா காற்றுவெளியினை
உறவுகளெனும் ஒற்றைச் சொல்லால்
ஓயாது எச்சில்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

முன்பு சொல்லியிருந்த
இளமை நிலையாமை உயிர் நிலையாமை
யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை
எல்லாம் மறந்துவிட்டநிலையில்
அப்படி அறிந்திராத சொற்பிரதேசத்திலிருந்து
வந்தவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள்..

கண்களின் வழியான கடைசி பார்வை முழுக்க
அமைதியின் வடிவாய் அது காத்திருக்கிறது
அழகிய கைகளுடன்..
ஒவ்வொரு இனிய பொழுதில்
இவர்களையும் ஒவ்வொருவராய்..

எனவே
வாழும்வரை வாழ்வோம்
வாழ்க்கையை வாழ்க்கையாய்....

Monday, November 1, 2010

வாழாத தருணங்கள்


எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு எல்லோரும் கலந்து
கொள்ள அழைப்பும்விடப்பட்டு
நமது உயர்ந்த இருக்கையின் கால்களை ஏந்திப்
பிடித்திருக்கிறவர்களின் முன்பாக
பறவைகள் இரைதேடுவதற்காக மிகுந்த மகிழ்ச்சியோடு
இறக்கைகளைச் சிக்கெடுத்து உதறி விரித்து
வானெழும்பும் அற்புதத் தருணங்களில் அது எப்போதும்
நமக்குப் பிடித்தமானது என்பதை அனுபவிக்கமுடியாத
தருணத்திலும் இதமான வெயிலின் கம்பளம் விரிகின்ற
வெப்பத்தை உணரும் பொழுதிலும்
எங்கோ இசைக்கப்பட்டு வழிகின்ற ஒரு அற்புதமான
இசையின் கிறங்கித் தவிக்கின்ற தருணத்திலும்
நம்மீது நிகழ்த்தப்படுகின்ற
ஒரு திருடனின் மீது..அல்லது ஒரு தெருநாயின் மீது..
ஒரு பிடிக்காத ஒருவனின்மீது எறிகின்ற கற்குவியல்களைப்
போல நமக்கு அவமானங்கள் பூசப்படுகின்றபோது
அதையுணராமல்..அதைத் தடுக்காமலும்..அதுபோன்ற
தருணங்கள் நமக்குப் பிடிக்காத யாருக்கேனும்
நிகழ்ந்துவிடவேண்டும் என்றெண்ணி மருகுகிற பொழுதில்
நாம் வாழாதிருக்கிறோம் இந்த
வாழ்வின் அற்புத தருணத்தை.....


மிக உயர்ந்த
உச்சத்திலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
இலைகள்...

அதற்குமேலான
பரந்து விரிந்த ஆகாயவெளியிலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
சிறகுகள்...

உயர்ந்ததின் உச்சம்
பணிதலென்பது பழைய ஞானம்
என்றாலும்
அது ஞானம்தான்..

தரைவிட்டெழும்பா
உறுதிசெய்யப்பட்டுவிட்ட மாயவாழ்வின்
சகலவிதிகளிலும் சிக்குண்டு
உதிர்ந்துவிடுகின்ற
மனித வாழ்வின் அத்தனை பிரயத்தனங்களும்தான்
எல்லாவித இரைச்சல்களுடனும்
எல்லா உயிர்களுக்குமான
இடையூறுகளுடனும்
இறங்குகின்றன எப்போதும்
உச்சமில்லை என்றுறுத்தி...

பின்குறிப்பாகவே...

ஒரு மனித உயிர் சாம்பலான
தருணத்தின் பொழுதுகளில்
எல்லா பறவைகளின் இசைக்கூறுகளும்
ஒரேயலைவரிசையில்
அசைந்தோடுகின்றன
கோடைமுடிந்து வருகின்ற
நிறைநதியாய்....

Friday, October 29, 2010

ஜென் இலைகள் 2





ஒரு ஆழமான காயத்தின்
சீழ்பிடித்த வலியும்

நான் என் தந்தையைக்
கை ஓங்கிய தருணத்தின்
வலியும்

இப்போது என்பிள்ளை
என் கழுத்தைப் பிடித்தமுக்கிய
தருணத்தின் வலியும்

ஒன்றாகவே
உணர்த்தப்படுகின்றன

நெருக்கடியான சாலையின்நடுவே
திறந்த மார்புகளுடன்
அலையும் அந்த
மனம் பிறழ்ந்த பெண்ணின்
உணர்வான காலத்தின்
வலிகளைப் போலவே....

கோயிலைத்
திறக்கிற கதவின் ஓலியும்
பிச்சையிடுதலுக்காக
திறக்கிற வீட்டுக்கதவின் ஒலியும்
ஓர்
இசையாகப் பரவுகிறதெங்கும்..




எந்தப் பயணத்திலும்
கடைசியாகவே
நானிருந்தாலும்
அந்தப் பயணம்
என்னைக் கொண்டு
முடிகிறதென்பது
உவகையுடன்
தொடர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கிறது...





இரவில்
தொடர்ந்து குழந்தையை
அழவிடுபவர்கள்
நரகத்திற்குப் போகக் கடவர்....
என்னை மலடியாக
சாபமிட்ட கடவுளின்
சாபத்தைப் போல...
கொட்டிவிட்ட
டம்ளரிலிருந்து
நீர் பரவுதலைப்போல
வெயில் பரவும் சாலையின்
நடுவே
அதன் இயல்பில்
கடந்துகொண்டிருக்கும்
மரவட்டையின்மேல்
நசுக்கிவிடாமல்
சட்டென்று டூவீலரைத்
வளைக்கிறேன்
அதன்
நம்பிக்கையைக்
காக்கும் பொருட்டு.....





எரியும்
நண்பனின் சடலத்திலிருந்து
அவன் மகனின்
அண்மைக்கு வருகிறது
ஒரு வெப்பம்
அவன் உடலில் வழியும்
நீரின் குளிர்மையைத்
தணிக்கவும்
தானின்றி தனயன் இனி
தாங்கப்போகும்
வெப்பம் தணிக்கவுமாக....
என் கண்களிலிருந்து
வருகின்றன
நீர்த்துளிகள்
அவனுக்கு அனுசரணையாக
வேறன்றி...

Sunday, September 12, 2010




கடவுளைக் கண்டேன்
கடவுளைப் பார்த்தேன்
கடவுளைத் தரிசித்தேன்

எது சரி?




வலி மிக வலியானது
மிக அனுபவமானது
மௌனத்தின் தருணத்தில்கூட....





சாலையில் சற்றுமுன் நடந்த
விபத்தின் நேரத்திலிருந்து
என்னைப் பின்னிறுத்தியது எது?




ஒரு துயரத்தின் வாசலை
திறக்கவும் மூடவும்
செய்கிறது அனுபவம்...




கொட்டுகிறது மழை
ரயில் பயணத்தில் இறக்கிவிட்ட
கண்ணாடி சன்னலின் வழியாக
தெரிகிறது தண்டவாளக் குடிசைகளில்
சிம்னிகள் தவம்...
மழையின் ஈரம் முழுக்க
மனத்தில் வழிகிறது..
போகிற போக்கில்
இறங்குகிற சந்திப்பிற்குள்
ஒரு நிமிடம் வேண்டுங்கள்
அந்த சிம்னிக்களுக்காக....

Saturday, August 14, 2010


அதன் இயல்பானது
காத்திருக்கிறது அதற்கான தருணத்தின் பொறுமைக்கும்...
வாழ்தலின் துடிப்பையறியும் அதன் வாழ்விற்கும்...
எப்படியும் அதிகபட்சம் மரணம் வழங்கப்படும்
என்றறியாத அதன் அறியாமைக்கும்...
வயிறு நிறையும் அதே கணத்தின் முடியாத கணத்தில்
சம்பவிக்கும் மரணத்திற்கும்..
யாரும் யாரும் காரணமல்ல பரஸ்பரம்
எனும் கடவுளின் விதியறிந்துவிட்ட
மனத்தோடு
ஆழ்ந்த உறக்கம் தழுவும் வேளையில்
வந்தமரும் அந்த சின்னஞ்சிறு உருவத்திற்கும்
பெயருக்கும் உரிமையான
கொசுவிற்காக
எங்கும் தெரியா போர்வை விலக்கி
சிறிது உடலும் ரத்தமும்
சிறிது உறக்கம் கலைத்தும்....

Thursday, July 1, 2010

ஜென் இலைகள்....




திறந்திருக்கிறது கதவு
ஏற்கெனவே....
இரைச்சலுடன் உள்ளேறுகிறது
புழுதிபோர்த்திய காற்று..
ஷோகேசில்
புன்னகையுடன்
புத்தர்...



சிரிக்கமுடியுமா?
முடியும்..
முடியாது..
அழமுடியுமா?
முடியும்..
முடியாது..
சற்று முன் உயிர்நீத்த
யாரின் உடலோ....




கறையான்
மனிதன்
விடுவதேயில்லை
மண்ணையும்
மனத்தையும்...




எல்லோருக்கும் எங்கும்
கிடைக்கிறது ஓர்
அவமானக்கத்தி
யார் மீதும் வீசவும்
யாரிடமிருந்தும் வாங்கவும்....